வத்தளை துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல்

வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றின் போது நபரொருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பின்னர் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஸ்வரன் லுசிநாத் மற்றும் 34 வயதுடைய கணேசன் விக்னேஸ்வரன் என தெரியவந்துள்ளது.
அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவது தொடர்பில் இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இரவு வத்தளைப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.




