பாடசாலைகளில் நடக்கும் பிரச்சனைகளை மூடி மறைக்காதீர்கள்

பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அலுவலர்கள் மத்தி , மாகாணம் என்று பிரிந்து செயற்படாமல் எல்லோரும் எமது பிள்ளைகளே என்ற அடிப்படையில் செயற்படவேண்டும்.
எந்தவொரு விடயமும் பாதிப்பு ஏற்பட முன்னரே வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட வேண்டும், அதற்கு சிறுவர்களுடன் தொடர்புடைய சகல அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம்.
கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள் சிறப்பாகச் செயற்பட்டன. இப்போது அவை அருகிவரும் நிலையில் அவற்றை மீளவும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரவேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன் பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படுதல் மற்றும் அதனைக் கண்காணித்து கையாளல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.