தையிட்டியில் மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட காணிகள் குறித்து தெற்கு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்

தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர் எனவே அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட வேண்டாம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட விகாரை குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம்.
பொசன் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.
தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர்.
காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள்.
சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட காணிகள் குறித்தும், தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையையும் தெற்கு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல கூடாது என தெரிவித்துள்ளது.