சிங்கள மக்களுக்கு என்றால் ரத்தம் தமிழர்களுக்கு என்றால் தக்காளி சட்னியா ?

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்.என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தையிட்டி சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையை அகற்றகோரி இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நம்பிக்கை கிடையாது. எங்கள் உரிமைகளை போராடிய பெற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் உணர்வு ரீதியான விடயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டவிரோதம் என்றால் சட்டவிரோதம் தான் சிங்கள மக்களுக்கு என்றால் ரத்தமும் தமிழர்களுக்கு தக்காளி சட்னி என்று இருக்க முடியாது.
தையிட்டி போராட்டம் சிங்கள மக்களுக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல. இது சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிரானது.
யாழ்ப்பாணம் நகரின் மையத்தில் ஆரியகுளம் நாகவிகாரை இருக்கிறது. அங்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். நயினாதீவு விகாரை இருக்கிறது. அங்கு பலரும் வந்து செல்கிறார்கள். அங்கே எந்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை தமிழ் மக்கள் சென்று பார்வையிடுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்.
குரல் இல்லாத மக்களுக்கு அரசியல்வாதிகள் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி போராட்டத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கூறுகின்றார். அந்த மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மை உள்ளதா என்பதை பார்த்து அதற்கு தீர்வை வழங்க வேண்டுமே தவிர அங்கு அரசியல் இருப்பதாக கூறுவதாக இருக்ககூடாது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இங்கு அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையில் அதற்காகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.
இரண்டு வருடங்களாக சிங்கள மக்கள் தையிட்டிக்கு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் நாங்கள் ஆபத்தை ஏற்படுத்தவில்லை.
ஜனாதிபதி பங்கேற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரத்திற்கு ஜனாதிபதியினால் பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அது சட்டவிரோதம் என்பது ஜனாதிபதிக்கு தெரியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொலிசார் எதிராக செயல்படுகிறார். மக்கள் போராடும் போது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வேறு வேறு வழக்குகளில் சிக்க வைத்து காணி உரிமை தொடர்பான போராட்டத்தை மௌனிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது - என்றார்