ஒட்டுசுட்டான் வெடிபொருள் வழக்கு - கைதான 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டானில் கடந்த மாதம் 22 ஆம் திகதி வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் உட்பட அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 09 பேர் மீதான வழக்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
பதில் நீதிபதி சுதர்சன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட் 09 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினர் அழித்துள்ளமைக்கான சான்றுகளையும் நீதிமன்றில் சிறப்பு அதிரடிப்படையினர் முற்படுத்தியுள்ளார்கள்.
இந்த வழக்கில் முதலாவது சந்கேநபரின் கைரேகைகளை எடுப்பதற்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
இதன்போது நீதிமன்றில் வைத்து அவரின் கைரேகைகளை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், நீதிபதி அறிவித்துள்ளார்.