மே தின வாழ்த்துச் செய்தி-முபாறக் அப்துல் மஜீத் முப்தி

மே தின வாழ்த்துச் செய்தி-உலமா கட்சித்தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி
மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக உலமா கட்சித்தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி தனது மே தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேதின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உழைக்கும் மக்கள் முழு சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு பெறுமதி வழங்கும், அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும், அது தொடர்பிலான ஆக்கபூர்வமாக ஊடாடல்களை மேற்கொள்ளும் ஓர் தினமாக மே தினம் அமைந்துள்ளது.சமூகத்தின் மேம்பாட்டிற்காக தனது வியர்வையை அர்ப்பணிக்கும் தொழிலாளர் தோழர்களின் தினமே இன்றாகும்.
தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வேறு நோக்கங்களை முன்னிலைப்படுத்தாது, தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நாட்டுக்கே நன்மை ஏற்படும் அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.