வீட்டாருக்கு தெரியாமல் கொழும்பு சென்ற 14 வயது சிறுமிகள் மீது பலாத்காரம்! இருவர் கைது...

ஆசிரியர் - Editor I
வீட்டாருக்கு தெரியாமல் கொழும்பு சென்ற 14 வயது சிறுமிகள் மீது பலாத்காரம்! இருவர் கைது...

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை (5) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பெற்றோர்களின் தொல்லை தாங்கமுடியாத  14 வயதுடைய இரு சிறுமிகள் கொழும்புக்குச் செல்வதற்காக கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை காலை பாடசாலை செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இவர்கள் பஸ்ஸில் மட்டக்களப்பு நகருக்கு சென்று பாடசாலை உடைகளை மாற்றிவிட்டு கொழும்புக்குச் செல்வதற்காக பஸ்தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளனர்.

இதன்போது,  இவர்கள் அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் ஏறி ஓட்டுமாவடி செல்வதற்கு பஸ் பயணச்சீட்டைப் பெற்றுள்ளனர்.

பின்னர், இந்த இருவரும் ஓட்டுமாவடியில் இறங்காமல் பஸ்ஸிலேயே உறங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுமிகளையும் எழுப்பிவிட்டு ஓட்டுமாவடியை கடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுமிகள் தாங்கள் கொழும்புக்கு செல்லவிருப்பதாக பஸ் சாரதி மற்றும் நடத்துனரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும்  சிறுமிகளை கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாகக் கூறி திருகோணமலையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பஸ் சாரதியும் நடத்துனரும் சிறுமிகளை திருகோணமலையிலிருந்து அழைத்துச்சென்று நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடி பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து , பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று நடந்த சம்பவம் தொடர்பில் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருகோணமலை மற்றும் கல்முனை நாற்பட்டிமுனை  பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 27 வயதுடைய பஸ் நடத்துனரும் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து , சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு