சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு அரசாங்கம் தனது புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும்!

ஆசிரியர் - Admin
சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு அரசாங்கம் தனது புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும்!

சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொளியில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு மாத்திரமன்றி அது ஏற்கனவே வெளியிட்ட கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படம் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும் சர்வதேச விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொணர்வதுடன் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.     

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் சனல்4 வெளியிட்ட 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சாட்சியங்களை உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பொன்று பேசுபொருளாக அமைந்திருக்கின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை போன்றவற்றிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த கோத்தபாய ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சிறையில் இருந்த இன்றைய ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மேற்படி குண்டுத்தாக்குதல் மற்றும் கொலையின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச, பிள்ளையான் போன்றோர் இதனை மறுதலிக்கின்ற அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை தேவை என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அதேபோல் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இதனை ஒரு பொய்யான ஆவணம் என்று அதனைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மட்டக்களப்பு படுவாங்கரையில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்கள் களவாடப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கொலை தொடர்பாக அப்பாவிகளான புனர்வாழ்வுபெற்றுத் திரும்பியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். உண்மையில் இந்தக் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளான சஹ்ரான் குழுவினர் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமல்லாமல் காத்தான்குடியில் ஒரு குண்டை வெடிக்கச் செய்து பரிட்சிக்கப்பட்டபோதுகூட சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படாமல் அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு பாதுகாப்புத்தரப்பிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதன் காரணமாகவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும் சணல்4 ஆவணங்களினூடாக அறியமுடிகிறது. அதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்க அவர்களின் கொலை பின்னணியிலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அவர்களின் பெயரும் சாட்சிகளால் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவை தொடர்பாக எதிர்த்தரப்பிலிருக்கின்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுவெளியில் இருக்கின்ற பலதரப்பினரும் ஒரு சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர். சர்வதேச விசாரணையைக் கோருவதின் அடிப்படைப்பொருளானது இலங்கையின் நீதித்துறையின்மீதும் இலங்கையின் பாதுகாப்புத்துறையின்மீதும் அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள் என்பதாகும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முவுற்றபொழுது, இறுதி யுத்தத்தில் ஏறத்தாழ 70,000பேர் வரை இறந்திருக்கலாம் என்று ஐ.நா. அறிக்கை கூறியது. அதுதொடர்பான விசாரணை ஒன்று தேவை என அந்த ஐநா அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அதன் பிரகாரமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா.சபை ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை இலங்கையின் மாறிமாறிவந்த அரசாங்கங்கள் நிராகரித்தன. ஆண்டகை மல்கம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி, பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே சர்வதேச விசாரணையை நிராகரித்தார்கள்.

ஆனால் இன்று கர்தினால் உள்ளிட்ட சிங்கள தரப்பின் ஒரு பகுதியினர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கின்றார்கள். ஏறத்தாழ 260 அப்பாவி மக்களும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தகுந்த சாட்சியங்களுடன் சணல்4 ஒரு ஆவணத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆகவே இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் மறுதலித்தாலும் தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் கோருவதுபோல் ஒரு சர்வதேச விசாரணையினூடாகவே அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதனைப் போலவே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்திலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக நூற்றுக்கணக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதுதொடர்பான ஒரு சர்வதேச விசாரணையை கடந்த 14ஆண்டுகளாக தமிழ் மக்கள் கோரி நிற்கிறார்கள். இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு தனது புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக மிகப்பாரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மூலதனங்களைக் கவரவேண்டுமாக இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்தாக வேண்டும். ஆகவே அவற்றை மனதில் கொண்டாவது அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு