வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடாத்த தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடாத்த தீர்மானம்!

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக எதிர்வரும் 9ம் திகதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 

9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். 

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர்.குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. 

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும்இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது. 

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு