நல்லாட்சி அரசுக்கு இனியும் ஆதரவு வழங்கவேண்டும் என எவரும் எதிா்பாா்க்கவில்லை. -நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்-

ஆசிரியர் - Editor I
நல்லாட்சி அரசுக்கு இனியும் ஆதரவு வழங்கவேண்டும் என எவரும் எதிா்பாா்க்கவில்லை. -நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்-

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவையிருந்தமையாலேயே பலரது விமர்சனங்களையும் மீறி கூடிய காலம் ஆதரவு வழங்கியிருந்தோம். 

ஆனால் இனிமேலும் அவ்வாறு ஆதரவு வழங்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இனிமேலும் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேச சமூகம் கூட எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தீர்வு திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின், மக்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் நிர்வாக முடக்கல் போராட்டங்களை செய்வோம் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம். 

குறிப்பாக 2014ஆம் ஆண்டே நாம் அதனை செய்வதற்கு ஆய்தமாகியிருந்த போது அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் புதிய அரசாங்கத்திற்கு நாம் ஓத்துழைப்பாக செயற்பட்டாலும் எமது இலக்குகளை நாம் மறந்துவிடவில்லை. புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருந்தது. அவ் அவகாசத்தை நாம் கொடுத்திருக்கின்றோம்.

 குறிப்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் அதனை அதிகமாகவே கடந்த மூன்றாண்டில் கொடுத்திருக்கின்றோம்.

அந் நேரத்தில் சர்வதேச சமூகமும், நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காததாலயே அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனது என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பலத்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனாலும் இனிமேலும் நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினை பேணுகின்றவன் என்ற அடிப்படையில் அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற அடிப்படையிலும் இனிமேலும் நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேசம் கூட எதிர்பாக்கவில்லை. இனிமேல் எதிர்ப்புக்களை காட்ட வேண்டும் என்றே சர்வதேசம் எதிர்பார்கின்றது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட நிர்வாக முடக்கல் போராட்டமானது வெறுமனே ஒத்திகை மாத்திரமே என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு