யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தல் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் படிக்கட்டுக்களில் இருந்து தவறி விழுந்தே உயிரிழந்து தலையில் பலமாக அடிபட்டதாலேயே உயிரிழந்துள்ளார். 

யாழ்.நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பதிவாகிய சிசிரிவி காணொளி பதிவை சான்றுப்பொருளாக நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்ட நீதிவான், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பின்னிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந்தன் (வயது-38) என்ற அலுமினிய தள வேலை ஒப்பந்தக்காரரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்தவரும் அவரோடு நெருக்கமுள்ள நால்வரும் மது அருந்தியுள்ளனர். அதன்போது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் உயிரிழந்தவருடன் சென்ற ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கட்டட வேலைத் தளத்துக்குச் சென்ற அவர் மூன்றாம் மாடியிலிருந்து நிலைதடுமாறி வீழ்ந்துள்ளார். படிக்கட்டுகளில் வீழ்ந்த அவர் கீழ் தளம் வரை சறுக்கி வந்து பாதுகாப்பு கம்புகள் பொருத்தப்படாதததால் படிக்கட்டுகளின் வெளிப்பகுதியில் சிக்குண்டுள்ளார். 

தன்போது அவரது தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அதிகளவு குருதிப் போக்கினால் உயிரிழந்துள்ளார் என்பது சம்பவ இட விசாரணையில் கண்டறியப்பட்டது. 

ஹோட்டலில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் எட்டுப் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதுதொடர்பில் பிறிதொரு வழக்குத் தாக்கல் செய்து இன்று நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு