மாவட்டச் செயலகத்திற்கு எந்தவொரு தொடர்புமில்லை, மாவட்டச் செயலர் கைவிரிப்பு..! சிலின்டர் வியாபாரம் செய்யும் அரச ஊழியர்கள் யார்..?

ஆசிரியர் - Editor I
மாவட்டச் செயலகத்திற்கு எந்தவொரு தொடர்புமில்லை, மாவட்டச் செயலர் கைவிரிப்பு..! சிலின்டர் வியாபாரம் செய்யும் அரச ஊழியர்கள் யார்..?

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 சமையல் எரிவாயு சிலின்டர்களில் 1000 சிலின்டர்கள் மாவட்டச் செயலக ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு பகிரப்பட்ட சம்பவத்திற்கும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கும் தொடர்பில்லை. என மாவட்டச் செயலர் க.மகேசன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ்.மாவட்ட செயலகம் உள்ளிட்ட 21 திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மிகுதி 650 சிலிண்டர்களையே யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஊடாக பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த விடயம் பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் மாவட்ட செயலரிடம் கேட்டபோது , 

கடந்த வாரம் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததமையால் , சிலிண்டர்களை பெற்று மக்களுக்கு விநியோகிக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில் விலை எவ்வளவு குறைக்கப்படும் என தெரியாது. ஆகவே பெரியளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால் , அதில் ஏற்படும் நட்டத்தினை யார் மீது சுமத்துவது என்ற பிரச்சனை இருந்தது. 

இந்நிலையில் திணைக்களங்களின் நலன்புரி சங்கங்கள் ஊடாக திணைக்கள பணியாளர்கள் தமக்கான எரிவாயுவினை பெற்றுக்கொள்ள கோரிக்கைகளை முன் வைத்தது. 

அதன் அடிப்படையில் அவர்களுக்கான சிலிண்டர்கள் இன்றைய தினம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் விநியோகிக்க நான் அனுமதிக்கவில்லை. 

ஏனைய திணைக்களங்கள் தொடர்பில் அந்த அந்த திணைக்கள தலைவர்களிடமே வினாவ வேண்டும். 

அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மாதாந்தம் 60 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் இதுவரை 40 ஆயிரம் சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மிகுதியும் மிக விரைவில் வழங்கப்படும் தினமும் யாழ்ப்பாணத்திற்கு 2 ஆயிரம் சிலிண்டர்களை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் வாரத்தினுள் யாழில் சிலிண்டர்கள் தாரளமாக பெற்றுக்கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அதன் பின்னர் நேரடியாக விநியோகஸ்தர்களே தமது வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிப்பார்கள் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு