யாழ்.மாவட்ட மக்கள் மிக நெருக்கடியான சூழலிலும் காட்டும் அமைதியும், ஒத்துழைப்பும் அளப்பரியது..! பொலிஸார் புகழாரம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்கள் மிக நெருக்கடியான சூழலிலும் காட்டும் அமைதியும், ஒத்துழைப்பும் அளப்பரியது..! பொலிஸார் புகழாரம்...

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியினால் பரவலாக வன்செயல்கள் நடந்துவரும்போதும் யாழ்.மாவட்ட மக்கள் மிகுந்த பொறுமையுடன் அமைதியாக இருப்பது மிக வரவேற்கத்தக்கது.

மேற்கண்டவாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.பி.லியனகே தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள். எனவே பொலிஸ் திணைக்களம் என்ற ரீதியில் யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

மேலும்  தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பித்தள்ளது. யாழில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு  ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது பரீட்சைக் காலம் என்பதனால் யாழிலுள்ள ஆலயங்களின் திருவிழாக்களின்போது  ஒலிபெருக்கி சத்தத்தினை  குறைத்து போடுவதன் மூலம் இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பரீட்சை காலங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலி பெருக்கிகளின் பாவனைக்கு தடைவிதித்திருக்கின்றோம். நிபந்தனைகளுடன் மாத்திரமே சகலருக்கும் பொலிஸ் ஒலிபெருக்கி அனுமதியினை வழங்குகின்றோம்

யாழில் குற்றச்செயல்கள் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிசார்  கைது செய்திருக்கிறார்கள். 

எனினும் சில சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். 

மேலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றால் புதிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு