யாழ்.வலி,வடக்கில் சாதாரண கழிவுகளுடன் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..! பிரதேசசபை மற்றும் சுகாதாரதுறைக்கு தொிந்தே நடப்பதாக மக்கள் சாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் சாதாரண கழிவுகளுடன் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..! பிரதேசசபை மற்றும் சுகாதாரதுறைக்கு தொிந்தே நடப்பதாக மக்கள் சாடல்..

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபையினால் கழிவகற்றப்படும் பகுதியில் மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள், பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறைக்கு தொிந்தே இந்த விடயம் நடப்பதாகவும் சாடியுள்ளனர். 

வலி,வடக்கு பிரதேசசபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் நல்லிணக்கபுரத்தை அண்மித்ததாகவுள்ள மண் அகழப்பட்ட குழிகளில் கொட்டப்படுகின்றது. அங்கே சாதாரண கழிவுகளுடன் வைத்தியசாலை கழிவுகள், மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், இரத்தம் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட குழாய்கள், சேலைன் போத்தல்கள் உள்ளிட்டவை வீசப்படுகின்றன. தெல்லிப்பழையில் வைத்தியசாலை கழிவுகளை முகாமை செய்வதற்கான பொறிமுறை உள்ள நிலையில் பொறுப்பற்ற விதமாக மக்கள் குடிமனையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு கொட்டப்பட்டு வருகின்றமை தொடர்பாக

பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறையினர் நன்றாக அறிந்திருந்திருப்பதாக கூறும் மக்கள் அதனால் அடுத்தகட்டம் என்ன செய்வதென்பது தொியாத நிலையில் தாம் உள்ளதாக கூறுகின்றனர். மருத்துவ கழிவுகள் அகற்றப்படுவதற்கு பிரத்தியேகமான பொறிமுறைகள் உள்ள நிலையில், 

சாதாரண கழிவுகளை கூட முகாமை செய்யாமல் நிலத்தடி நீர்வளத்தை பாதிக்கும் வகையில் கொட்டும் பிரதேசசபை அதனுள் மருத்துவ கழிவுகளை கொட்டுவது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளதுடன், 

பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறை இந்த விடயத்தில் பொறுப்பற்று நடப்பதுடன் கள்ள மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் சாடியுள்ளனர். அண்மையில் யாழ்.திருநெல்வேலி மற்றும் அரியாலை மயானம் ஆகியவற்றில் இவ்வாறு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தபோதும் அவ்வாறான நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு