SuperTopAds

இரணைதீவு மக்களைத் திரும்பிப் பார்க்காத அரசாங்கம்!

ஆசிரியர் - Admin
இரணைதீவு மக்களைத் திரும்பிப் பார்க்காத அரசாங்கம்!

இரணைதீவு கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி ஆராம்பித்த போராட்டம் நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில், தமது போராட்டம் தொடர்பாக கரிசனை கொள்ளாத அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளனர்.

கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள 'இரணை மாதா” கிராமத்தில் குடியேறினர். சுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் கிராமத்தில் உள்ள 'இரணைமாதா' கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.

தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான 'இரணை தீவு” கிராமத்துக்கு கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை நூற்றுக்கணக்கான படகுகள் மூலம் சென்று இரணை தீவு கிராமத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட மக்கள் இரணைதீவில் குடியேறி 8 நாட்கள் ஆகியும் குறிப்பிட்ட பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு அரச திணைக்களங்கள், அரச அதிகாரிகள் யாரும் தங்களுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் வரவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரணை தீவில் வசிக்கும் கடற்படையினர் கூட எந்த வித சமரசத்துக்கும் வரவில்லை எனவும் குறித்த தீவில் தாம் தனித்து விடப்பட்ட அனாதைகள் போல் தற்காலிக குடிசைகளை அமைத்து ஒழுங்கான குடிநீர் இன்றி உணவு இன்றி வசிப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கூறிய நிலங்கள் தங்களுக்கு வழங்கப்படும் வரை தாங்கள் தீவை விட்டு போக போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

சுமார் 400 குடும்பங்கள் வரை இரணைதீவு கிராமத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தங்களுக்கு நல்ல முடிவை தர வேண்டும் எனவும் தராத பட்சத்தில் தங்கள் போராட்டம் ஓரு போதும் ஓயாது எனவும் தெரிவித்த மக்கள் தங்கள் போரட்டம் தொடர்பாக கரிசனை கொள்ளாத அரச நிர்வாகத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைகுழுவிடம் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்யவுள்ளதாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.