தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம்...
தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் குத்தி தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இறைச்சி வாங்க வந்தவர் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் கத்தியால் குத்தியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து மாட்டிறைச்சிக் கடைக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.