வடமாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..! மக்கள் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளவேண்டும்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வடமாகாண மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்வதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். 

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 

1. பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

2. பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.

3. பொது இடங்களில் இருவருக்கு இடையில் ஆகக்குறைந்தது 1மீட்டர் சமூக இடைவெளி பேணப்படவேண்டும்.

4. அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே உள்ளே செல்ல வேண்டும், அத்துடன் வீட்டிற்கு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும்

5. பொதுமக்கள் அவசியமான விடயங்கள் தவிர வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

6. அவசியமற்ற விழாக்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது பிற்போடவேண்டும். கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும்.

7. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ற எண்ணிக்கையான பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவதுடன் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8. பொதுமக்கள் ஒன்று கூடும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களிலும் சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும்.

9. வணக்க தலங்களில் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடன் நடாத்தப்படுவதுடன் இதற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு