சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கில் ஸ்ரீகஜனை கைது செய்ய நடவடிக்கை!

ஆசிரியர் - Admin
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கில் ஸ்ரீகஜனை கைது செய்ய நடவடிக்கை!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் என்பவர் தப்பி செல்ல உதவியமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து, விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு துறை அதிகாரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது, வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ.ஜெயசிங்க மன்றில் முன்னிலையானர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளன. விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தமையை சுட்டிக்காட்டியும், சந்தேக நபரின் கடவுச்சீட்டு மன்றின் பாதுகாப்பில் உள்ளமையை சுட்டிக்காட்டியும், பிணை நிபந்தனைகளில் ஒன்றான ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள குற்றபுலனாய்வு பிரிவு திணைக்களத்துக்கு காலை 09 மணி முதல் 11 மணி வரையிலான நேர பகுதிக்குள் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனையை இரத்து செய்ய கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நீதவான், குறித்த பிணை நிபந்தனையை இரத்து செய்ய உத்தரவிட்டார். அத்துடன் உத்தரவை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு அனுப்ப பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை, சுவிஸ்குமார் தப்பி செல்ல, உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜனை கைது செய்வதுக்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக குற்றபுலனாய்வு துறை அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான யாழ்.பொலிஸ் நிலைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் ஸ்ரீகஜன் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் இன்று இடம்பெற்ற விசாரணைகளில், குற்றபுலனாய்வு துறை அதிகாரி, இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.குறித்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு