யாழ். பனிப்புலம் ஊடான பேருந்து சேவை இடைநிறுத்தம்_ பொதுமக்கள் பெரும் பாதிப்பு
கடந்த சில வருடங்களாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையால் சுழிபுரம் மேற்குப் பனிப்புலம் ஊடாக யாழ்ப்பாணத்திற்குத் தினமும் நான்கு தடவைகள் நடாத்தப்பட்டு வந்த பேருந்து சேவையானது கடந்த சில நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பேருந்து சேவையால் பயன் பெற்று வந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் இச் சேவை இடைநிறுத்தப்பட்டமையால் மூன்று கிலோமீற்றர்களுக்கு மேல் நடந்தோ அல்லது முச்சக்கரவண்டி போன்ற அதிக செலவை ஏற்படுத்தும் வாகனங்களைப் பயன்படுத்தியோ போக்குவரத்து மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவர்களும், உத்தியோகத்தர்களும், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகப் பிரதேச மக்களும், சமூகமட்ட அமைப்புக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்திருந்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இவ் விடயத்தில் உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.