தமிழர் தலைமைகளுக்கு அனந்தி சசிதரனின் அறிவுரை VIDEO
தமிழ்மக்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனைப் பேசுகின்ற அல்லது பெற்றுக் கொடுக்க முன்வரும் பிரதிநிதிகளாகத் தமிழர் தலைமைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ்மக்கள் தொடர்ந்தும் எங்களை ஆதரிப்பது மட்டுமல்ல எங்களுக்கான அங்கீகாரத்தையும் வழங்குவார்கள் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மைய உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ்மக்கள் வெளிப்படுத்திய அதிருப்தி நிலைப்பாடு தொடர்பில் வினாவிய போது எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மைய உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்களிப்பு வீதம் கணிசமானளவு குறைவடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி இம்முறை தமிழ்மக்களின் வாக்களிப்பு பல கட்சிகளையும் நோக்கித் திரும்பியுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. எனவே, மக்களின் அதிருப்தியான நிலைப்பாடு தொடர்பில் தமிழ்மக்களின் தலைமைகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.
எங்கள் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் தாங்களே எடுக்கின்ற முடிவுகள் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கின்றது என்ற செய்தி இந்தத் தேர்தல் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் எங்களுடைய தமிழ்த்தலைமைகளின் போக்குகளில் மாற்றம் ஏற்படுவதுடன் அவர்களின் முடிவுகள் கூடத் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை உருவாக்குபவையாக அமைய வேண்டும்
இதன் மூலமே எங்களின் நிலையான விடிவுக்கான, அபிவிருத்திக்குமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.