பிரத்தியேக மருத்துவமனைகள் தம் சுகாதாரத்தை நூறுவீதம் உறுதிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தமக்குரிய வைத்திய உதவிகளை வெளிநோயாளர் பிரிவில் பெற்றுச் செல்கின்றார்கள். அதற்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்று வெளியேறுகின்றார்கள்.. இருந்தும் பல நோயாளர்கள் அல்லது விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதனைக் கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் இரவு பகலாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. மாறாக வைத்திய அதிகாரிகள் பிரத்தியேக வைத்தியசாலைகளில் பணம் சம்பாதிக்கின்றார்கள்.
இலவச மருத்துவமனைகளில் அவர்களின் சேவைகள் திருப்திகரமாகக் கிடைக்கப்பெறுவதில்லை என்ற கருத்தே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. எனவும்,
இது முற்றிலும் தவறானது என்று நான் கருதுகின்றேன். வைத்திய நிபுணர்கள் பிரத்தியேக வைத்தியசாலைகளுக்கு செல்வது உண்மை. ஆனால், அவர்கள் தமது கடமைகளுக்கு மேலதிகமான நேரங்களிலேயே இவ்வாறான விசேட கடமைகளை ஆற்றி வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலவச மருத்துவமனைகளில் அவர்களின் சேவைகளை நான் நேரடியாகப் பெற்று பயன் பெற்றவன்.
அந்தவகையில் அவர்களுக்கு எனது அங்கீகாரத்தை வழங்குவதில் தயக்கமுமில்லை. எம்முள் பலர் களியாட்ட நிகழ்வுகளிலும், உணவு விடுதிகளிலும் பொழுதுகளைக் கழிக்கின்றபோது வைத்திய நிபுணர்கள் நோயாளிகளை கவனிப்பதிலும் அவர்களுக்குரிய மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் முழு நேரத்தையும் செலவிடுகின்றார்கள்.
தவறான மருத்துவ விநியோகம், பயிற்சியற்ற தாதியர்களை , பணியாளர்களை வேலைக்கமர்த்தல் போன்றவை நோயாளிகளை நிரந்தர ஊனர்களாக மாற்றிவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து முகாமைத்துவங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுதலை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்