உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்; கூட்டமைப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்!
இந்த உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் அரசுக் கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அசைக்க முடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ளதாவது-,
எமது உரிமைகளை, உரித்துக்களை தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளையும் முன்வைத்து அரசிடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தீர்க்க தரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் யார் வந்தாலும் எம்மவர் பயப்படத் தேவையிருந்திருக்காது.
சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது பலவிட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமையால் தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடக்கு மாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியான முறையில் செய்யவிடாமல் தமிழ் அரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர். எம் மக்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி இருட்டறையில் தள்ளிவிட்டு தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள்.
முதலமைச்சரான எனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில் மக்களின் நிலமை என்னவாக இருந்திருக்கும் என்று பல சமயங்களில் நான் எண்ணிப்பார்த்ததுண்டு. இவை யாவும் வெளிப்படைத் தன்மையற்ற நடைமுறைமையின் பிரதிபலிப்புக்களே.
இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு சகலரையும் பங்குதாரர்களாக உள்வாங்கி ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சி வேறுபாடுகள் கடந்து முன்னெடுத்து எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும்.- என்றுள்ளது.