குரும்பசிட்டியில் வீடு புகுந்த கொள்ளையர்களால் நகை மற்றும் சைக்கிள் அபகரிப்பு
அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர் குடும்பத் தலைவர்களைத் தாக்கிவிட்டு நகைகளையும் துவிச்சக்கரவண்டியையும் எடுத்துச் சென்றனர். தாக்குண்டவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து மிளகாய்த் தூளை வீடு முழுதும் வீசி எறிந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தெல்லிப்பழை குரும்பசிட்டியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றது. கறுப்புத் துணியால் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் வந்திருந்த 4 பேரே கொள்ளையடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தபோது உறக்கத்திலிருந்த கணவன் மனைவியான வயோதிபர்கள் இருவரும் விழித்துக் கொண்டனர்.
அவர்களிடம் தாலிக்கொடி எங்கே என்று கேட்டவாறு தாம் கொண்டு சென்றிருந்த கொட்டனால் தாக்கியுள்ளனர். அது தம்மிடம் இல்லை என்று கூறியதால் குடும்பப் பெண் அணிந்திருந்த தோடுகளைக் கொள்ளையர் கழற்றி எடுத்துள்ளனர். பின்னர் வீடு முழுதும் சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தி ஒன்றரைப் பவுண் சங்கிலியையும் கொள்ளையர் எடுத்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தாகமாகவுள்ளது தண்ணீர் எடுத்துத் தாருங்கள் என்று கொள்ளையரிடம் கேட்டுள்ளனர். அதன்பின்னர் கொள்ளையர் சமையலறையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமன்றி அங்கிருந்து மிளகாய்த் தூளை எடுத்து வீடு முழுதும் வீசி எறிந்து, அங்கிருந்த அலைபேசியை பல துண்டுகளாக உடைத்து வீசி எறிந்தனர். பின்னர் அங்கிருந்த துவிச்சக்கரவண்டியையும் எடுத்துச் சென்றனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
திருடர்கள் ஓடிய பின்னரே அயல்வீட்டாரை அழைத்து நடந்ததைக் கூறியுள்ளனர். அதன்பின்னர் தெல்லிப்பழைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்களில் ஒருவர் சிங்கள மொழியில் கதைத்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.