யாழில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – வேதநாயகன்
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்களிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 7 முதல் 8 அரச அதிகாரகிகள் கடமைகளில் ஈடுபடுவர் என்றும் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிசார் கடமைகளில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக 5 முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொலிசாரும் அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். மேலும் சுவரெட்டிகள் பதாதைகள் இடம்பெறாத வகையில் பொலிசார் கண்காணித்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.