கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கும்! எச்சரிக்கும் கூட்டமைப்பு

ஆசிரியர் - Editor II
கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கும்! எச்சரிக்கும் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஏற்பட்ட நிலைமையே, சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தெரிவு செய்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி.மேற்கு பிரதே சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நாம் இந்த முறை களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் அனுபவசாலிகள். அவர்கள் சபையை வினைத்திறனாகக் கொண்டு நடத்துவார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்நிலையில், வலி.மேற்குப் பிரதேச சபையை நாம் கைப்பற்றுவது உறுதி. அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால், எமது வெற்றி பெருவெற்றியாக இருக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டுள்ளது. அவற்றில் சமாந்தரப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு மற்றையது அபிவிருத்தி.

தமிழ் இனம் அடிமைப்பட்ட இனமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காகவே எங்களின் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடினார்.

எமது போராட்டம் பல நாடுகளின் சகுனித்தனத்தால் துரதிஷ்டவசமாக அழிக்கப்பட்டு விட்டது. ஆயுதம் ஏந்தா அறவழியில் போராடினோம். பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடினோம்.

இரண்டு முடிவுக்கு வந்த நிலையில் இப்போது இராஜதந்திர ரீதியில் போராடுகின்றோம். எமது இராஜதந்திரப் போராட்டத்தை பலரும் பல விதமாக விமர்சிக்கலாம். ஆனால் எமது பாதை சரியானது. இந்தப் பாதையில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்கவேண்டும்.

கூட்டமைப்பு இலக்கை அடைவதற்காக ஒற்றுமையாகப் பயணிக்கின்றது. ஆனால், சிலர் எம்மிடமிருந்து பிரிந்து செல்கின்றார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு