சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக கூல் மற்றொரு முறைப்பாடு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் தேசிய பேரவையின் யாழ்ப்பாண மாநகர சபை மேஜர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜுவன் கூல் இன்று முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இயங்கும் தேர்தல்கள் பிரிவில் இந்த முறைப்பாட்டை அவர் வழங்கினார்.
தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது சட்டத்தரணி மணிவண்ணன் தன்னை விமர்சித்ததாக கடந்த மாதம் செய்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக இன்று மற்றொரு குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
கடந்த மாதம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், இருதரப்பையும் இணக்கம் செய்ய முயற்சித்தனர். எனினும் அதனை ஏற்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜுவன் கூல் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை நீதிமன்றுக்கு விடுவதற்கு பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில் அதே முறைப்பாட்டில் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டையும் கூல் இன்று முன்வைத்தார்.