இரட்ணஜீவன் கூல் சட்டத்திற்கு அப்பால் பட்டவரல்ல: குருபரன்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் சட்டவாளர்களையும் ஏன் ஊடகங்களையும் இலக்கு வைத்து தாக்கும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திட்டமிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக நிறுவனத்திற்கு தேடி சென்று முழங்கித்தள்ளியமையின் பின்புலம் ஆராயப்படவேண்டுமென சட்டத்தரணியும் வடகிழக்கு சிவில் சமூக அமையப்பேச்சாளருமான கு.குருபரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதி மைத்திரியின் யாழ்ப்பாண இணைப்பாளராக உள்ள குகநாதனின் தொலைக்காட்சியான டாண் தொலைக்காட்சி கலையகத்திற்கு சென்று உரையொன்றை ஆற்றி அதனை பத்திரிகையாளர் சந்திப்பென காண்பிக்க முற்பட்டிருந்தார்.
இது தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்று சட்டத்தரணியும் வடகிழக்கு சிவில் சமூக அமையப்பேச்சாளருமான கு.குருபரனிடம் எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த குருபரன் நடுநிலையாக இருக்கவேண்டிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான இரட்ணஜீவன் கூல் தமிழரசுக் கட்சிசார்ந்து இயங்குவது அப்பட்டமாக தெரிகின்றது.
மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஆனோல்ட்டை தெரியாத அவரிற்கு மணிவண்ணன் மட்டும் நன்கு தெரிவதாக கூறினார். இரட்ணஜீவன் கூல் திட்டமிட்டு தமிழ்த் தேசியப் பேரவையினருக்கு எதிரக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகவும் தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிராகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி குருபரன் ரட்ணஜீவன் கூலினால் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் ஆதராங்களையும் காண்பித்தார்.
காவல்துறைக்கும் நீதிபதிக்கும் தமிழ்த்தேசியப் பேரவையினருக்கும் குறிப்பாக சட்டத்தரணி மணிவண்ணனுக்குமிடையில் பெரியளவிலான டீல் ஒன்று இருப்பதாகவும் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் ரட்ணஜீவன் கூல் குறிப்பிட்டுள்ளார்.
இதனை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி குருபரன் இது நீதித்துறையையும் காவல்துறையையும் அவமதிக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டியதோடு ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் இரு முக்கிய துறைகளான நீதித்துறை மற்றும் தேர்தர்கள் திணைக்களம் ஆகிய இரண்டையும் தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரியுள்ளார்.அவரது இணைப்பாளரது தொலைக்காட்சி அலுவலகலத்திற்கு தேடி சென்று இரட்ணஜீவன் கூல் முன்வைத்துள்ள கருத்துக்கள் பொதுவெளியில் செயற்படுமொருவர் பேணவேண்டிய தனிமனித கௌரவத்தை அவர் கண்டுகொள்வதில்லையெனவும் தெரிவித்தார்.