சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
”கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் கூறுகின்ற விவகாரம் எல்லை மீறிப் போய் விட்டது. அவ்வாறு கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஓரிரு நாட்களில் இந்த சட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டவாளர்கள் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியிருப்பதாகவும், உண்மையை எடுத்துக் கூறவில்லை என்றும், தமது தரப்பு நியாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.