உங்கள் வீடு தேடி வருவோரை நம்பி இனியும் ஏமாந்து போய் விடாதீர்கள்: எஸ்.விஜயகாந்
மக்களது நலனில் அக்கறை கொள்ளாது வாக்குகளுக்காக மட்டும் உங்கள் வீடு தேடி வருவோரை நம்பி இனியும் ஏமாந்து போய் விடாதீர்கள். உங்கள் வாக்குகளின் பெறுமதியை உணர்ந்து செயற்படுங்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் உள்ளுராட்சித் தேர்தலில் யாழ் மாநகர சபையில் போட்டியிடவுள்ள தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் எஸ்.விஜயகாந்.
திருநகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுடனான சந்திப்பு ஒன்று 28ம் திகதி யாழ் 3ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே அக்கட்சியின் செயலாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளருமான விஜயகாந் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு.
கடந்த காலத்தில் உங்கள் வாக்குகளை பெற்றவர்கள் உங்கள் குடும்பத்திற்கோ> கிராம அபிவிருத்திக்கோ எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. அவர்களுக்கத் தேவை நீங்களோ உங்கள் கிராமத்தின் அபிவிருத்தியோ அல்ல. உங்கள் வாக்குகள் மட்டுமே அவர்களது தேவை.
நான் கடந்த மாநகரசபைத் தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்னர் உங்கள் தேவைகள் அறிந்து பல்வேறு விதங்களில் உதவிகளைச் செய்துள்ளேன்.
அதன் பின்னர் தற்போது மீண்டும் ஒரு தடவை உங்கள் ஆதரவிற்காக உங்கள் முன்வந்துள்ளேன்.
நீங்கள் எனக்கு ஆதரவளித்து அதன் மூலம் என்னை வெற்றியடையச் செய்யுங்கள் மீண்டும் ஒரு தடவை உங்கள் கிராமத்திற்கு உதவும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
பணக்கார வீட்டுப் பிள்ளையாக பஞ்சு மெத்தையில் பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை நாங்கள்.
இந்த மண்ணில் பிறந்து உங்கள் பிரச்சனைகளை அறிந்து வாழ்ந்தவர்கள் தான் நாங்கள்.
உங்கள் அபிருத்தி உங்கள் கைகளில் தான் உள்ளது என்றார்.