தமிழ் கைதிகளுக்கு ஆபத்து! முதலமைச்சரின் கைகளில் அவசர மனு

ஆசிரியர் - Editor II
தமிழ் கைதிகளுக்கு ஆபத்து! முதலமைச்சரின் கைகளில் அவசர மனு

கொலை மற்றும் கொள்ளை, போதைவஸ்து உட்பட பாதாள உலக கோஸ்டியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வேறு பகுதிக்கு மாற்றக் கோரியும், உடனடியாக இந்த பிரச்சினையை ஜனாதிபதிக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் செயலகத்தில் இன்று நண்பகல் முதலமைச்சரை சந்தித்த அரசியல் கைதிகளின் உறவினர்கள், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாதாள கோஸ்டி மற்றும் கொலை கொள்ளைகாரர்களுடன் தடுத்து வைப்பது தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

அரசியல் கைதிகளின் உறவினர்களினால் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு எதிர்பார்க்கின்றோம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எமது சொந்தங்களின் விடுதலையானது நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களுக்கு அப்பால் இன ரீதியிலான அரசியலுடன் பின்னப்பட்டு பிரித்தெடுக்க முடியாமல் இருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசீன் சிறைச்சாலையில் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட விடுதியில் கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு வந்தனர்.

எனினும், அண்மைக்காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதே சிறைக்கூடத்தில் கொலை மற்றும் கொள்ளை, கப்பம், பாதாள உலக கோஸ்டியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதனால், தமிழ் அரசியல் கைதிகளும் அன்றாட பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதுடன், போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாகி சீரழியும் நிலமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்த போது, சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

இருந்தும், இதுவரையில் அரசியல் கைதிகளின் இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு எட்டப்படாத நிலையில், நேற்று வடமாகாண முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் நோக்கில், முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக முதலமைச்சர் அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, மருத்துவ தேவையுடைய அரசியல் கைதியின் மருத்துவ தேவையினை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி, முதலமைச்சரிடம் அரசியல் கைதியின் உறவினர் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு