பலாலியில் கண்ணிவெடி வெடித்து இராணுவச் சிப்பாய் பலி! - இருவர் படுகாயம்
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் இராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன் போது கல் ஒன்றை அகற்றுவதற்காக நான்கு இராணுவ வீரர்கள் இணைந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.
குறித்த வெடி விபத்தினால் சம்பவ இடத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வெடிச்சம்பவத்தில் பலியான இராணுவ வீரரின் சடலம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ பொலிஸார் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.