பல்கலைக்கழக மாணவா்களை விடுதலை செய்யுங்கள் ஜனாதிபதிக்கு சீ.வி காட்டமான கடிதம்..

ஆசிரியர் - Editor I
பல்கலைக்கழக மாணவா்களை விடுதலை செய்யுங்கள் ஜனாதிபதிக்கு சீ.வி காட்டமான கடிதம்..

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவா்கள் இருவரையும் விடுதலை செய்யவேண்டும். என வடமாகாண  முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளாா். 

மேலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போாில் படுகொலை செய்யப்பட்டவா்களுக்கு வருடாந்தம் நடைபெறும் அஞ்சலி நிகழ்வினையும் நடாத்த ஆவண செய்யுமாறும் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் கேட்டுள்ளாா். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யும் வகையில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். 

சாதாரண சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்படலாம் . 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில்  அவசரகால தடை சட்டம் இல்லாமல் செய்யப்பட்டபின்னர், குற்றங்களாகக் காணப்படாத விடயங்களும் செயற்பாடுகளும் தற்போது 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக மீண்டும் அவசர கால நிலமை கொண்டுவரப்பட்டு அவை குற்றங்களாகக் காணப்படும் நிலமை உருவாகி இருக்கின்றது.

அத்துடன், மீண்டும் அவசரகால நிலமை கொண்டுவரப்பட்டதன் ஒரே நோக்கம், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்காகவே என்று இருக்கும்போது, இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத தமிழ் மாணவர்களைக் கைதுசெய்திருப்பது முறையற்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் நீண்ட காலமாகவே அங்கு இருக்கின்றன. அவசரகால பிரகடனத்துக்கு முன்பாக இந்தப் படங்களை வைத்திருப்பது குற்றங்களாகக் கணிக்கப்படவில்லை.

அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர்  மட்டக்களப்பு விகாராதிபதி மங்களராமய தேரர் பிரபாகரனை புகழ்ந்து பேசியிருந்தார். இதேமாதிரியான கருத்துக்களை அரசின் முக்கிய பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர். பிரபாகரனின் நிர்வாகத்தை புகழ்ந்து பேசிய திருமதி.விஜயகலா மகேஸ்வரன் தற்போது அரசின் அமைச்சர் பதவி வகிக்கின்றார்.

இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்  கைது செய்யப்பட்டிருப்பது வேண்டுமென்று செய்யப்பட்ட நடவடிக்கை போல் தோன்றுகின்றது. அதனால் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

முஸ்லிம் மக்களின் வீடுகளையும் ஏனைய அவர்களின் இடங்களையும் சோதனையிடுவதற்கு உத்தரவிடப்பட்ட இராணுவம் ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தது என்று கேள்வி எழுகின்றது. குறிப்பாக கலைப்பீட மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடங்களில் வட மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை ஒழுங்குசெய்தபோது இந்த மாணவர்களே பெரும் உதவிகளைச் செய்திருந்தனர்.

இவ்வாண்டு மே 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் பத்தாம் வருட நினைவு கூரல் நிகழ்வுகளைக் குழப்பும் வகையிலும் இராணுவ பிரசன்னத்தை வடக்கில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள துரதிஷ்டவசமான தற்போதைய சூழ்நிலையை அரசு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றும் என்ற கேள்வி எழுகின்றது.

2013ஆம் வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டது முதல் இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு தாம் வலியுறுத்திவருகின்றோம்.  

1960 களில் இராணுவத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் உயர் கல்வியில் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டு தமிழ் மாணவர்கள் பாகுபாடு  காட்டப்பட்டமையும்  தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தன.

அதேபோல மீண்டும் இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்  இளைஞர்களை எழுச்சி கொள்ள இடமளித்துவிடவேண்டாம்.

அதேவேளை, விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறுவது சாத்தியம் இல்லை என்றும் அவர்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் இராணுவ தளபதி அண்மைய காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 “ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளை காரணம் காட்டுவதை நான்  விரும்பவில்லை. எப்பொழுதும் ஏதாவது நடைபெறும்போது விடுதலைப்புலிகளை அவற்றுடன் தொடர்புபடுத்துவது இலகுவானது. 

ஆனால் இது உண்மைக்கு வெகுதூரம் புறம்பானது” என்று இராணுவ தளபதி ஒரு சந்தர்ப்பதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதலால், எந்தவித நிபந்தனைகளும்  இன்றி கைதுசெய்யப்பட்ட  மாணவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு மாணவர்களின் சார்பாக வேண்டிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு