யாழ். உடும்பிராய் யோகபுரத்தில இளம்பெண்களைத் தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
யாழ். உடும்பிராய் யோகபுரத்தில இளம்பெண்களைத் தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்!

வீடு ஒன்றுக்குள் நுழைந்து சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரான இளைஞனின் தாயார் தானும் தாக்குதலுக்குள்ளாகியதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 23 ,18 மற்றும் 16 ஆகிய வயதுகளை உடைய சகோதரிகளான் மூன்று இளம்பெண்கள் தாக்குதலுக்குள்ளாகினர். முன்பள்ளியின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் அத்துமீறிய பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் மூவரையும்1 கடுமையாகத் தாக்கினர்.

தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார். தாக்குதலுக்குள்ளானவர்கள் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அம்யூலன்ஸ் வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய இளைஞன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது தாயார் தன்னை யாரோ தாக்கிவிட்டார்கள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுவருகிறார். இளைஞன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

“சந்தேகநபர் பெண் பிள்ளைகள் வசிக்கும் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அவரது தாயாரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கற்கள், பொல்லு மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் பெண் பிள்ளைகளை இவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.

கிராமத்திலுள்ள முன்பள்ளி ஒன்றின் காணி விடயம் தொடர்பிலேயே வீடு புகுந்து அங்கு வசிக்கும் சகோதரிகளை சந்தேகநபரும் தாயாரும் தாக்கியுள்ளனர். சந்தேகநபரின் தாயார் தன்னை யாரோ தாக்கினார்கள் என்று தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான தாக்குதல் தொடர்பில் பிறிதொரு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு