மக்களே பீதியடைய வேண்டாம் ! வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும்!!!
எதிர்காலத்தில் வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் எனவும் மக்கள் இது குறித்து எவ்வித அச்சமுமடையத் தேவையில்லையென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த நாட்களில் ஐ.ஓ.சி நிறுவனம் தரமற்ற பெற்றோலை இறக்குமதி செய்துள்ளநிலையில், அவற்றை உள்நாட்டில் அனுமதிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோலை விநியோகிப்பது சற்று குறைவடைந்துள்ளது. எனினும் தற்போதைய நிலையில் தேவையின் 80 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பெற்றோல் தவிர்ந்த ஏனைய எரிபொருள்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை.
எதிர்காலத்தில் வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் . இது தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடையத் தேவையில்லை என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.