SuperTopAds

​பூநகரி - செல்லையாதீவு சந்தியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Admin
​பூநகரி - செல்லையாதீவு சந்தியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

பூநகரி - செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு சாட்சியாளராக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இடம்பெற்றன.

இந்தநிலையில், சட்ட வைத்திய அதிகாரியினதும் மரண விசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒருவர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தை தான் பார்க்கும் போது, பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிசாருக்கு தெரிவித்திருந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு அவரை மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுஇவ்வாறு இருக்க, இவ் விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்ட மரணித்தவரின் குடும்பத்தார், பொலிசார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாக, தெரிவித்து அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.