புளொட் வேட்பாளரான பெண் அச்சுறுத்தப்பட்டாரா? - சிவமோகன் எம்.பி விளக்கம்

இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மண் என்பதனால் புளொட்டிற்கு புதுக்குடியிருப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருந்திருக்கலாம்" என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை வவுனியாவில் நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
"புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இருந்த 100% வெற்றிக்கு சேறு பூசுவதற்கான வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன். யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்தில் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் என்னிடம் வேட்புமனு ஒப்படைக்க்பபட்டிருந்தது. இதன் போது வேட்பாளர்களிடம் ஒப்பம் பெறுவது, அதனை முகவர் ஊடாக உரியவர்களிடம் தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைப்பது என்பன மட்டுமே எனது பணியாக காணப்பட்டது.
அந்த வகையில் சகல வேட்பாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாள் அனைத்து வேட்பளார்களிடமும் ஒப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒப்பமிடவேண்டிய 23 பேரில் 21 பேர் மட்டுமே சமுகமளித்திருந்தனர். அதில் புளொட் சார்பாக போட்டியிட வேண்டிய பெண் வேட்பாளர் அங்கு வரவில்லை. அதன் பின்னர் நான் நேரடியாக புளொட்டின் பிரதேச பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு குறித்த வேட்பாளரை அனுப்புமாறு கோரியிருந்தேன். அவர்களும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் ஊடக அறிவிப்பில் எனது அலுவலகத்தில் இருந்து மிரட்டப்பட்டதாக தகவல்கள் வந்தன. அது பொய்யான தகவல். அலுவலகத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் வைத்தே அந்த பெண்ணுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது. ஆகவே அந்த பிரதேச புளொட் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்கவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அதன்போது ஒப்பமிடுமாறு குறித்த பெண்ணிடம் நான் நேரடியாகவே கூறியிருந்தேன். நீங்கள் ஒப்பமிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும், நீங்கள் ஒப்பமிட்டு செல்லலாம் என கூறியிருந்தேன்.
அப்போது அந்த பெண் புளொட்டின் வற்புறுத்தலாலேயே நான் இங்கு வரவேண்டியிருந்தது. எனக்கு இதில் ஒப்பமிட சம்மதமில்லை. என்னை வற்புறுத்தவேண்டாம். அதைச் சொல்லிவிட்டு செல்லவே நான் வந்தேன். ஒப்பமிட வரவில்லை என கூறினார். ஆனால் இப்போது, தான் வேட்பாளராக முடியாமல் போனதற்கு நானே காரணம் எனச் சொல்லப்படுகின்றது. உண்மையில் அந்த பெண் அங்கு வராமையும் ஒப்பமிடாமையுமே அதற்குக் காரணமாகும். இதற்கு அனைத்து வேட்பாளர்களுமே சாட்சி.
இவ்விடயம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றது. ஆனால் அப்பெண் தனது கிராமத்திற்கு சென்ற பின்னர் நடந்ததாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. அதைப்பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. அதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. பொய் வாக்குமூலத்தினை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து புதுக்குடியிருப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றியைத் தட்டிவிடுவதற்காக செய்யப்பட்ட காரியமாகவே இதனை பார்கின்றேன்.”
இதன்போது, ‘நீங்கள் வெளியிட்ட ஒலி வடிவம் அப்பெண்ணுடையதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஏன் நீங்கள் அந்தப் பெண்ணையே அழைத்து வந்து ஊடகவியலாளர்களை சந்தித்திருக்ககூடாது?’ எனக் கேட்டகப்பட்டது. “அந்த பெண் மீண்டும் மீண்டும் ஊடகங்களின் முன் வந்து கருத்து சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் இந்த ஒலி வடிவத்தில் நானும், விவசாய அமைச்சர் சிவனேசனும், அந்தப் பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கின்றோம். ஆகவே இதனை உறுதிப்படுத்துவது கடினமாக இருக்காது.
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவே இதுவரை காலமும் நான் இது தொடர்பான மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாமல் இருந்தேன். ஆனால் இது தடம்மாறி ஊடக அறிவிப்பை மாத்திரம் வைத்துக்கொண்டு பொய்யான பரப்புரை தேர்தல் ஆணையாளர் வரை சென்றமையினாலேயே இந்த ஊடக சந்திப்பின் மூலம் உண்மையைத் தெளிவுபடுத்த விரும்பியிருந்தேன்.
“இது மாத்திரமின்றி, புதுக்குடியிருப்பு விடுதலைப்புலிகள் இறுதிவரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்த மண். இந்திய இராணுவத்தைத் தவிர எந்த இராணுவமும் விடுதலைப்புலிகள் இல்லாமல் போகும் வரை புதுக்குடியிருப்புக்குச் சென்றதில்லை. எனவே புளொட் அமைப்புக்கு அங்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் வற்புறுத்தியதாக நான் கூறவில்லை.
“இத்துடன் உண்மைகளை அறிந்துகொண்டு ஊடக அறிவிப்புகளை செய்திருந்தால் இவ்வாறான பிரச்சனை வந்திருக்காது. அல்லது பொலிஸ் நிலையத்தில் பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றவர்கள், அதேநாளில் என்னிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தால், அதனை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தால் இப்பிரச்சனை அன்றே தீர்ந்திருக்கும். ஆனால் இன்று ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு என்மீது சேறுபூச நினைக்கின்றனர். இது அனைத்தும் அப்பட்டமான பொய்யான அறிக்கை" எனத் தெரிவித்தார்.