ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! - கஜேந்திரன்

ஆசிரியர் - Admin
ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! - கஜேந்திரன்

புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு நடக்கும் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பினை நிராகரித்து வாக்களியுங்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"தமிழர்களின் தீர்வு பற்றி பேசுபவர்களிடம், எங்களுடைய வாழ்விடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படுமா, தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படுவதும், வரலாறு திரிவுபடுத்தப்படுவதும் நிறுத்தப்படுமா, கடற்தொழில், விவசாய இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்படுமா, அதற்கு நீங்கள் கொண்டுவரும் தீர்வு வழிவகுக்குமா, என மக்கள் கேட்க வேண்டும். கொண்டு வரும் தீர்வு இவற்றை நிறுத்தப்போவதில்லை என்று சொன்னால் அது தீர்வு அல்ல.

இன்று தனிநாடு கோரமுடியாத நிலையில் இருக்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் அழிவுகளில் இருந்து விடுபடவேண்டுமாக இருந்தால் ஒரே ஒருவழி தமிழர்களின் தேசம் அங்கிகரிக்கப்படவேண்டும் இவ்வாறு நடக்காவிட்டால் எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கள் தொடரும்.

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒருபோதும் எங்களுக்கு தீர்வாகாது. சுமந்திரனுடனும், சம்மந்தனுடனும் இருக்கின்ற தனிப்பட்ட 15 பேரின் சுகபோகங்களுக்காக தமிழர்களின் எதிர்காலத்தினை அடைவு வைக்க முடியாது. சுமந்திரன், இந்த மக்களை தன்னுடைய சட்டத்திறமைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற சதி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

கூட்டமைப்பில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளுக்கு கையேந்தி விட்ட கூட்டமைப்பினர் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை கொண்டுவருவதற்கு துணைபோய்க் கொண்டிருக்கின்றார்கள்.

மக்களிடம் நான் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வது உங்களுடைய தியாகங்களை சவக்குழியில் தள்ளுகின்ற வகையில் அடுத்த மாதம் ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட இருக்கின்றது. அது ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கு வருகின்ற பொழுது அதற்கு நீங்கள் வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. அந்த இடத்தில் வாக்கு சாவடிகளுக்கு சென்று இந்த ஒற்றையாட்சியினை நிராகரிக்கின்றோம் என்று புள்ளடி இடவேண்டும் என தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு