போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் யோசனைக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!
தமிழ் கைதிகள் சிலரின் குற்றங்கள் அவர்களின் அரசியல் உரிமையுடன் சம்பந்தப்பட்டுள்ளன. படைத் தரப்பை பொறுத்தவரையில் அவர்கள் இழைத்தனர் என்று கூறப்படும் குற்றங்கள் சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இரண்டையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தனிப்பட்ட மற்றும் பொதுக் குற்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் புலி உறுப்பினர்கள் விடயத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி நீண்டகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு முன்வைத்துள்ள யோசனை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: இராணுவத்தினரைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கு யோசனை முன்வைக்கவுள்ளோம் என்று அரச தலைவர் கூறியிக்கின்றார். அதேபோன்று தடுப்பில் உள்ள புலிகளையும் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர்களையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றார். இது தொடர்பில் உங்களிடமும் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்: அது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒரே விதமாக பார்க்க முடியாது. தமிழ் கைதிகள் சிலரின் குற்றங்கள் அவர்களின் அரசியல் உரிமையுடன் சம்பந்தப்பட்டுள்ளன. படைத் தரப்பை பொறுத்தவரையில் அவர்கள் இழைத்தனர் என்று கூறப்படும் குற்றங்கள் சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இரண்டையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள கொள்ள முடியாது.
கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றதா?
பதில்: நிச்சயமாக நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி: ஏன் அரச தரப்பு இப்படி ஒரு யோசனையை முன்வைக்கின்றது?
பதில்: நெருக்கடிகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வதற்காக இவ்விதமான கருத்துக்களை முன்வைக்கலாம்.
அதேவேளை,போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார் எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும்.
முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாக பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளை புறந்தள்ளும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாக கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காக கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் 12,000 போராளிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.
பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாக படையினருக்கு பொதுமன்னிப்பு என்ற அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.