SuperTopAds

மக்களின் இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி உறுதி

ஆசிரியர் - Editor II
மக்களின் இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி உறுதி

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூடியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய காணிகளையும் முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்களின் இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான காணிகளை விடுவிக்கும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முகாமைத்துவம் செய்து கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கண்டறியுமாறும் பணிப்புரை விடுத்தார்.

பாதுகாப்புப் படையினரின் நலன்புரி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன்,பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள விதிமுறைகளுக்கு ஆலோசனைக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.