அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவேண்டும்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12பேருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என கலாநிதி நிர்மால் ரன்ஜித் தேவசிறி தெரிவித்தார்.
அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12 பேர் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொலை வழக்கின் தீர்ப்பு சமூகத்தில் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. போராட்டத்துக்காக மக்களை தூண்டியதன் ஒரு பெறுபேறாகவே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நானும் இருக்கிறேன்.
ஏனெனில், மக்களுக்கு அரசியலமைப்பை மீறி செயற்பட முடியும் என நானும் அந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தேன். மக்கள் அணி திறள்வதற்கு நானும் ஆதரவளித்திருக்கிறேன்.
அதனால் இந்த சம்பவத்துக்கு நானும் பொறுப்புக்கூற வேண்டும் என்றே நினைக்கிறேன்.மக்களை தூண்டுவதற்காக முன்னின்ற அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த பொறுப்பில் இருந்து யாருக்கும் தப்பிக்க முடியாது என்றார்.




