சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து மட்டுமே கஜேந்திரகுமாருடன் பேசுவோம்!

அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மாத்திரமே கலந்துரையாடவிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இச்சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்புவிடுத்ததன் காரணமாக, இதன்போது எவ்விடயம் பற்றிப் பேசப்படும் எனத் தான் அறியவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேசரியிடம் தெரிவித்தார்.
இருப்பினும் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துப் பேசப்படும் பட்சத்தில், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் வலியுறுத்தியதைப்போன்று கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்படவேண்டும் எனும் விடயத்தை சுட்டிக்காட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இச்சந்திப்பின்போது உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மாத்திரமே கலந்துரையாடவிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேசரியிடம் தெரிவித்தார்.
மேலும் சமஷ்டிக் கட்சியாகிய தமது கட்சி சமஷ்டி கொள்கையிலேயே இருப்பதாகவும், இருப்பினும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படவேண்டிய அவசியம் இருக்காது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.