யாழில். 1113.78 மில்லியன் ரூபாயில் வேலைத் திட்டங்கள்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின், பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போது, மாவட்டச் செயலகத்தினால் - பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா உள்ளடங்களாக 1113.78 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கடவுச் சீட்டு அலுவலகத்தினை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி, வலையமைப்பு வசதி மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் கொட்டகை போன்ற வேலைத் திட்டங்களே உள்ளன எனவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி 09 மாகாண ஆளுநர்களுடான கலந்துரையாடலில் இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட மாகாணங்களுக்கு 03 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் என ஆளுநர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது.
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், மணல் அகழ்வு, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.