SuperTopAds

வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்!

ஆசிரியர் - Editor IV
வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்!

எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கூட்டணியானது பல்வேறு சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று சபைகளுக்கான வேட்பு மனுக்களும், கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக யாழ்.மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக வியாழக்கிழமை (20) 2023ஆம் ஆண்டு 31ஆம் இலக்க உபபிரிவு மூன்று சட்ட ஏற்பாட்டின் பிரகாரம், பெண் உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமாண உறுதியுரைக்காக கையொப்பம் இல்லாமையால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதேபோன்று வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் இளம் வேட்பாளர்களின் பிறப்புச்சான்றிதழ் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று தான் பருத்தித்துறை மற்றும் கரைச்சிப் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இளம்வேட்பாளர்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அதிகாரியால் அது மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான குறித்த அதிகாரியொருவர் குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம், நல்லூர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுவில் ஒருவரின் விடயம் தவறாக இருந்தமையால் அவருடைய வேட்பு மனு மட்டும் நீக்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே எமது விடயத்தில் ஒட்டுமொத்தமாக நிராகரிப்புச் செய்வதற்கும் ஏனைய தரப்பினருக்கு வேறுவிதமாக நடைபெறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.