கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும்.
கச்சதீவுக்கு குழுவாக / தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளிமாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவுக்கு செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு உணவு மற்றும் சனிக்கிழமை காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.