தங்கியிருக்க இடம்கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டில் களவு! ஒட்டுசுட்டானில் பதுங்கியிருந்த 33 வயதான பெண் கைது..

ஆசிரியர் - Editor I
தங்கியிருக்க இடம்கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டில் களவு! ஒட்டுசுட்டானில் பதுங்கியிருந்த 33 வயதான பெண் கைது..

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தங்கியிருந்த பெண்ணொருவர், அவ்வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்று, தலைமறைவாகி, பின்னர் கைதானதையடுத்து, அப்பெண்ணை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (1) உத்தரவிட்டார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு, அங்கு கடமையாற்றும் தன் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரை தேடி, ஒட்டுசுட்டானிலிருந்து வந்த 33 வயதுடைய காதலிக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக, பெண் பொலிஸ் உத்தியோத்தரொருவர் தன் வீட்டில் தங்கவைத்துள்ளார். 

அதனையடுத்து, அவ்வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை அப்பெண் திருடிச் சென்று தலைமறைவாகியிருந்தார். அதன் பின்னர், அப்பெண் ஒட்டுசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்டார். 

ஆரையம்பதியைச் சேர்ந்த காதலனான பொலிஸ் உத்தியோகத்தர், ஏற்கெனவே திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், அவர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தபோது இந்தப் பெண்ணை காதலித்ததோடு, தான் திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர், அப்பெண்ணை ஏமாற்றிவிட்டு, அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு தன் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரை சந்திக்கச் சென்றபோதே காதலனால் தான் ஏமாற்றப்பட்டமை பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. 

அதனையடுத்து, அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இனையடுத்து, அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏமாற்றப்பட்ட அந்தப் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு தன் வீட்டில் தங்கவைத்துள்ளார். 

மூன்று தினங்கள் கழித்து, கடந்த ஜூன் 10ஆம் திகதி அந்தப் பெண் தன் வீட்டுக்குப் போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி அந்த வீட்டுக்கு அருகாமையில் ஒளிந்திருந்து அவ்வீட்டை அவதானித்துள்ளார். 

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டை பூட்டிவிட்டு, கதவின் திறவுகோலை வழமைபோல ஓரிடத்தில் வைத்துவிட்டு, கடமைக்குச் சென்றுள்ளார். அதனை அவ்விடத்தில் மறைந்து நின்று அவதானித்த அப்பெண், அத்திறவுகோலை பயன்படுத்தி, வீட்டினுள் நுழைந்து தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இந்த திருட்டு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (30) ஒட்டுசுட்டானில் வைத்து காத்தான்குடி பொலிஸார் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டனர்.

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு