வடக்கு, தென்னிலங்கை மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும் - ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
வடக்கு, தென்னிலங்கை மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும் - ஜனாதிபதி..

வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில்  மக்களை அச்சுறுத்தியது தொடர்பில்   வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தியை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நிற்கிறோம். ரூபாய் பெறும் வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை தேர்தல் தீர்மானிக்கும்.

அன்று நாங்கள் அரசமைத்த போது அனுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 2 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம்.

சில சமயங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். வரிசை அதிகரித்து செலவை குறைத்தோம். மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர். சிறந்த எதிர்காலம் கிடைக்குமென மக்கள் நம்பினர். எனவே மீண்டும் வரிசை யுகத்திற்கு தேவையில்லை. எனவே முன்னோக்கிச் செல்வோம்.

ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனான ரூபாய் வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது.  அந்த சலுகை மக்களுக்கும் கிடைக்கிறது.  வீட்டின் கஷ்டங்களை பெண்களே அறிவர்.  பொருட்களின் விலை குறைந்ததால் அஸ்வெசும நிவாரணம் வழங்கினோம்.

அதேபோன்று பொருளாதாரம் தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தனியார் துறையில் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்போம். அரச ஊழியர்கள் பெரும் சுமைகளைத் தாங்கிக்கொண்டனர்..

அதனால் இன்று வாழ்க்கைச் சுமை சற்று குறைந்திருக்கிறது. இத்தோடு விட்டுவிடாமல் மக்கள் சுமையை மேலும் குறைப்போம். கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். மக்களுக்கு காணி உறுதிகளை தந்திருக்கிறேன். ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை தேர்தலின் பின் அந்த திட்டம் தொடரும்.

அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக வேலைத் திட்டங்கள் என்னிடம் உள்ளது. அதனால் தான் 'இயலும் ஸ்ரீலங்கா' என்று சொல்கிறேன். அனுவரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும்.

நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப் சலுகைகள் கிடைக்காது. அதனை செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

நாம் இப்போது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால் பெருமளவில் வரி அறவீட்டு பரப்பை அதிகப்படுத்தி வரிச்சுமையை குறைக்க வேண்டும். பெண்களே பொருளாதார நெருக்கடியின் பிரச்சினைகளை பல கஷ்டங்களுக்கு மத்தியில் நிர்வகித்தனர். அதற்காக பெண்களைப் பாராட்டுகிறேன். பெண்கள் பட்ட கஷ்டங்களை மறுக்கவில்லை. எனவே பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

உள்ளூராட்சி, மாகாண சபைகளில் பெண்களின் பிரச்சினைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு வழங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். சட்ட உதவிகளையும் பெண்களுக்கு வழங்குவோம். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வட்டி வீதம் குறைக்கப்படும்.

விவசாய நவீனமயமாக்கலை வடக்கிற்கும் வழங்குவோம். வருமானத்தை அதிகரிக்க வழி செய்வோம். மலையக பகுதிகளிலிருந்தும் அதற்காக ஒத்துழைப்பு பெறப்படும். அதனால் மக்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதற்காக சலுகைக் கடன்களையும் வழங்குவோம். சுற்றுலாப் பயணிகள் வருகையை இரட்டிப்பாக அதிகரிப்போம். அதற்காகவே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தோம்.

வடக்கில் மூன்று கைத்தொழில் பேட்டைகளை அமைப்போம். டிஜிட்டல் பொருளாதார மையங்களையும் அமைப்போம். யாழ். மக்கள் வௌியில் சென்று தொழில் செய்யாமல் இங்கு தொழில்களை செய்ய வழிமுறைகளை உருவாக்குவோம். யாழ். நதி திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு தருவோம்.

கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதற்காகவே 'இயலும் ஸ்ரீலங்கா' திட்டம் செயற்படுத்தப்படும். மீண்டும் மாகாண சபைகளை செயற்படுத்துவோம். பாரிய அபிவிருத்திகளை செய்ய மாகாண சபைகளின் பங்களிப்பு அவசியம்.

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது 'தெற்கு மக்கள் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபட்டிருக்கும் போது வடக்கு மக்கள் அதற்கு மாறான தீர்மானத்தை எடுத்தால் தெற்கு மக்களின் மனோபாவம் எவ்வாறு இருக்கும்' என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்வது வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகும். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கூறினோம். மக்கள் வாக்களித்தனர். ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு மக்களை அச்சுறுத்த வரவில்லை.

ஆனால், ஜே.வீ.பி மக்களை அச்சுறுத்துகிறது. அனுரவிற்கு வெற்றிபெற்ற அனுபவம் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியமும் இல்லை. வடக்கு மக்களின் சட்டரீதியான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். எனவே, மக்களை அச்சுறுத்தியதையிட்டு ஜேவீபியினர் வெட்கப்பட வேண்டும். அனுர திசாநாயக்க இதற்காக வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக சிங்கள மக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனவே, விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது." என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு