வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு  ஆளுநர் நல்லிணக்க  நடவடிக்கை

 
நீண்ட காலமாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக  வரவேற்புக் கோபுரம் அமைக்கப்படும் பகுதிக்கு  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு குறித்த வரவேற்பு கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கும் வீரமுனை கோவிலுக்கும் உள்ள தூரத்தை நேரில் சென்று  பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டினால்  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறித்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை (30) பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகை தந்ததுடன் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலானது மூடிய அறையினுள் நடைபெற்றதுடன் ஊடகங்களுக்கு செய்திகளை சேகரிப்பதற்கு  அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த கலந்துரையாடலில்  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி - போக்குவரத்து -  நீர்ப்பாசனம் - நீர் வழங்கல் - கிராமிய வீடமைப்பு - கிராமிய மின்சாரம் - கட்டிட நிர்மாண அமைச்சுக்களின் செயலாளராக  எம்.கோபால இரத்தினம்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம். முகம்மட், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் எம்.ஐ.எம் றனுஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். சகில், ஐக்கிய தேசியக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வாஸித், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வீரமுனை கோவில் உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


அத்துடன் குறித்த கலந்துரையாடலின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதில் முஸ்லிம் தமிழ் உறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, கலையரசன், பள்ளிவாசல் தலைவர், கோவில் தலைவர், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள தலைவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் போன்றவர்களிடம் இதற்கு பொறுப்பான திணைக்களத்தின் வரைவு படங்களையும் மற்றும் வளைவு கோபுரம் அமைக்கு பகுதியில் காணப்படும் முஸ்லிம் தமிழ் மக்களின் குடும்ப எண்ணிக்கை விபரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்குமாறும் இதற்கான தீர்வை ஒருமாதம் பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தருவதாக  குறிப்பிட்டார். 

ஆளுநரின் வருகையை முன்னிட்டு சம்மாந்துறை பகுதியில்  இராணுவம் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு