அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை

ஆசிரியர் - Editor III
அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம  வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க  அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(15) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பணியினை ஆரம்பித்து வைக்க அடிக்கல் நட வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கு   நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற உத்தரவினை சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று வாசித்து காட்டியதுடன் அப்பகுதியில் இடம்பெறவிருந்த பதற்ற நிலைமையினை சீர் செய்தனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை(14)  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக இரு  நபர்களினால் முறைப்பாடு ஒன்று  மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய இந்த நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர்   மன்றிக்கு சமர்ப்பித்த  அறிக்கையின் பிரகாரம் சனிக்கிழமை  (15) சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்க்குட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்துவதனால் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்க்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதானகுலைவு ஏற்ப்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட கூடிய சாத்தியமுள்ளதாலும் இவ் நிகழ்வை நடாத்துவது உசிதமானது அல்ல என்பதனால் இந்த நிகழ்வினை நடத்தாமல் நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன்  வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால்   கிராம உத்தியோகத்தர் பிரதீபன்  உட்பட சிலருக்கு  கோபுரம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 அத்துடன் குறித்த இடத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்தார் சம்மாந்துறை பொலிஸாரினால் நீதி மன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டது.  இதன் போது இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்றார் இதே வேளை வீரமுனை பிரதேச மக்களினால் குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி கூடுகள் நாட்டப்பட்டன.

இதனால் முஸ்லிம் தமிழ் இனத்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குறித்த இடத்திற்கு பொலிஸ் உயர் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம். சகீல்  பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அவர்களின் சம்மாந்துறைக்கான இணைப்புச் செயலாளர் ஆக்கிப் அன்சார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர்  கோவில் நிர்வாகத்தினர் கிராம சேவை உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் 2024.06.19ம் திகதி காலை 09.00 மணிக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

குறித்த கோபுரம் அமைப்பது சம்பந்தமாக இதற்கு முன்னரும் முயற்சி செய்து அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டப்படி அனுமதி பெறப்படாமல்   அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமல் உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு