தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்!

ஆசிரியர் - Editor IV
தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்!

தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தில் வாழும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19.01.2024) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.     

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின் போது இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் அனுமதி அட்டைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்றதாகவும், அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன எனவும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன், சர்வதேச அங்கிகாரம்பெற்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதனூடாக உலகின் எப்பகுதிக்கும் செல்லும் தகுதியை இந்தியவாழ் இலங்கை அகதிகள் இன்றுமுதல் பெற்றுக்கொள்கின்றனர்.

இதற்கமைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஈடிணையற்ற தமது ஒத்துழைப்புகளை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதம மந்திரி செயலக அதிகாரிகள், வெளியுறவுத்துறைச் செயலக அதிகாரிகள், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுக செனவிரட்ன, சென்னைக்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்ற பவ வருடகாலமாக அவ்வப்போதைய அரசாங்கத்திடம் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை சாத்தியப்படாதிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இவ்வகதிகளுக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதானது சுமார் ஒரு இலட்சம் அகதிகளுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து நலன்புரித் திட்டங்களுக்குள் உள்வாங்கி அகதிமுகாம் என்ற சொல்லை மாற்றி மறுவாழ்வு நிலையம் என உருவாக்கிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இவ்விடத்தில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

இதற்கமைய இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ப.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு