ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!

ஆசிரியர் - Editor IV
ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆயி என்கிற பூரணம். இவர் அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தனர்.

இவருக்கு கொடிக்குளம் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். இவர் இந்த நிலத்தை தனது கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தானமாக வழங்கியுள்ளார்.

மறைந்த மகள் ஜனனியின் நினைவாக நிலத்தை பள்ளிக்கு தானமாக பூரணம் வழங்கியுள்ளார். அதற்காக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில் நில பாத்திரத்தை முறையாக பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இவ்வளவு பெரிய விடயம் செய்த பூரணம் இதனை பொது வெளியில் சொல்லவும் மறுத்துவிட்டார். இந்நிலையில், பூரணத்திற்கு பள்ளி சார்பாக வரும் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு